Tuesday, July 31, 2012

நீத்தார் பெருமை

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.  - 21

தி.பொ.ச. உரை:  இவ் உலகில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறந்த பெரியோர்களின் பெருமையைச் சிறப்பிப்பதே அறநூல்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
=================================================

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.  -  22

தி.பொ.ச. உரை: உலகியல் இன்பங்களைத் துறந்த பெரியோர்களின் பெருமை எவ்வளவு என்றால் இவ் உலகில் இறந்துபட்ட மாந்தர்களின் எண்ணிக்கை அளவேயாகும். ( அளவற்றது என்பதே பொருள்).
================================================

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.  - 23

தி.பொ.ச.உரை: இம்மை, மறுமை என்ற இரண்டின் தன்மை அறிந்து இவ் உலகில் அறம் செய்வோரின் பெருமையால் தான் இவ் உலகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
================================================

    உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வறனென்னும் வைப்பிற்கோர் வித்து.  - 24

தி.பொ.ச. உரை: மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளை அடக்கிக் காப்பவன் வறண்ட நிலம் ஆகிய ஊருக்குப் பெய்யும் மழை ஆவான்.  ( ஆய்வுக் கட்டுரை)
===================================================

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமன்
    ஐந்திரனே சாலுங் கரி.    -  25

தி.பொ.ச. உரை: ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றல் (பூவுலகினைக் கடந்து) அகன்ற வானத்தில் பரவிநிற்குமோ?. (பரவிநிற்கும் போலும்). இதற்குக் கதிரவனே போதுமான சான்று ஆவான்.  ( ஆய்வுக் கட்டுரை)
====================================================

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.    -  26

தி.பொ.ச. உரை: ஐம்புலன் வென்ற பெரியோரே செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவராம். அவரல்லாத சிறியோரால் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமுடியாது..
:====================================================

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.   -  27

தி.பொ.ச. உரை: சுவை, ஒளி, தொடுகை, ஒலி, மணம் என்ற ஐவகை புலனுணர்வுகள் செய்யும்  தந்திரங்களை ஆராய்ந்து அறியவல்லவனே இவ் உலகினைக் கட்டுப்படுத்த வல்லவன் ஆவான்.
====================================================

    நிறைமொழி மாந்தர் பெருமை நிறத்து
    மறைமொழி காட்டி விடும்.  -  28

தி.பொ.ச. உரை: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும்.  ( ஆய்வுக் கட்டுரை)
===================================================

    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காண்டல் அரிது.   -  29

தி.பொ.ச. உரை: குணம் ஆகிய குன்றின் மேல் நிற்கும் ஐம்புலன் அவித்தோரிடத்து அற்ப அளவேனும் சினத்தைப் பார்ப்பது அரிதாகும். ( ஆய்வுக் கட்டுரை)
=====================================================

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.    - 30

தி.பொ.ச. உரை: எல்லா மக்களிடத்திலும் வேறுபாடின்றி அன்பு பூண்டு பசியாற்றுவதால் தான் வேளாண் மக்களும் அறவோராகக் கருதப்படுகின்றனர். ( இக் குறள் இந்த அதிகாரத்தில் தவறாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இக் குறளின் பொருளே போதுமான சான்றாகும்.)
====================================================

Monday, July 30, 2012

வான்சிறப்பு

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11

தி.பொ.ச. உரை:  உலக வாழ்க்கையானது மழையை நம்பியே இருப்பதால் அம் மழையே (உயிர்வாழத் தேவையான) அமிழ்தம் என்று அறியப்படுகிறது.
==============================================

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.  - 12

தி.பொ.ச. உரை: நுகர்வோருக்குத் தேவையான நல்ல உணவுப்பொருட்களை விளைவிக்கவும் அவருக்குத் தானே ஒரு உணவுப்பொருளாக இருக்கவும் வல்லது மழையாகும்.
=============================================

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.  - 13

தி.பொ.ச. உரை:  மேகம் (மழை பெய்யாது) பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இந்த பரந்த உலகெங்கும் பசியானது நிலையாக இருந்து உயிர்களை வாட்டி வதைக்கும்.
=============================================

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.  -  14

தி.பொ.ச. உரை:  மழை என்னும் நீரின் வளம் குறைபடுமானால் ஏர் கொண்டு உழமாட்டார் உழவர்.
===========================================

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.  - 15

தி.பொ.ச.உரை: (பெய்யாமல் பொய்த்து வறுமையில் உழல வைத்துக்) கெடுதல் செய்ய வல்லதும் கெட்டவர்க்கு ஆதரவாய் ஆங்கே பெய்து ( விளைச்சலைப் பெருக்கி அவரது பொருளாதாரத்தினை) உயர்த்துவதும் மழையே ஆகும்.
===========================================

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.  - 16

தி.பொ.ச. உரை: மழைத்துளி விழாவிட்டால் இந்த மண்ணில் பசும்புல்லின் தலையைக் கூடக் காண முடியாது. ( இனி பிற உயிர்களின் நிலையினைக் கூறவும் வேண்டுமோ?)
=========================================

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.  - 17

தி.பொ.ச. உரை: (கடலில் இருந்து ஆவியாகிச் சென்ற) மேகங்கள் தாம் அழிந்து மழையினை வழங்காவிடில் நெடிய கடலும் தனது நீர்வளத்தில் குன்றிப்போகும்.
=======================================

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   - 18

தி.பொ.ச. உரை: மேகங்கள் நீரின்றி வறண்டு போனால் இவ் உலகில் பசுக்களுக்கும் சிறப்பும் பூசனையும் நடவாது. ( ஆய்வுக் கட்டுரை)
=======================================

    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.   -  19

தி.பொ.ச. உரை: மேகங்கள் மழையினை வழங்காவிட்டால் இந்த பரந்த உலக மக்களிடத்தில் கொடுத்து உதவும் குணமும் (தானம்) பொறுமையும் (தவம்) ஆகிய இரண்டு நற்பண்புகளும் தங்காது.
======================================

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.   -  20

தி.பொ.ச. உரை: யாராயினும் நேர்மை (வான்) இல்லாவிட்டால் ஒழுக்கம் என்பதில்லை. அதைப்போல மழை இல்லாவிட்டால் இந்த உலகமும் இல்லை.
=====================================

Saturday, July 28, 2012

கடவுள் வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    யகவன் முதற்றே உலகு. -1

தி.பொ.ச.உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தினை முதலாகக் கொண்டுள்ளன. அதைப்போல இந்த உலகம் காரண அறிவாய் விளங்கும் இறைவனை முதலாகக் கொண்டுள்ளது.  ( ஆய்வுக் கட்டுரை )
========================================

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின். - 2

தி.பொ.ச. உரை: தூய அறிவினனான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தமது சிந்தையில் பேணாதவர்கள் என்ன கற்றிருந்தும் என்ன பயன்?. (ஒன்றுக்கும் உதவாது!)
=======================================

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். - 3

தி.பொ.ச. உரை: பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்கும் இறைவனின் மாட்சிமை மிக்க திருவடிகளைச் சேர்ந்தவர்கள் இப் புவியில் (புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர்.  (ஆய்வுக் கட்டுரை)
=====================================

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.   - 4

தி.பொ.ச.உரை:  விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கு எவ்விடத்தும் துன்பம் என்பதே இல்லை.
=====================================

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு.  - 5

தி.பொ.ச. உரை: இறைவனையே அடையக் கூடிய பொருளாகக் கொண்டு சரணடைந்தோரிடத்தில் இருளாகிய விதியினால் ஏற்படுகின்ற நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை. ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    பொறிவாயில் அந்தணன்தாள் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.  - 6

தி.பொ.ச. உரை: உருவமும் பெயருமற்ற அந்தணனனாகிய இறைவனின் திருவடிகளைக் கள்ளமில்லாத ஒழுக்கத்துடன் பணிந்து நின்றவர்கள்  (இவ் உலகில் புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர். ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.- 7

தி.பொ.ச. உரை: தனக்கு ஒப்புமையில்லாத ஒருவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்குத் தமது மனக்கவலைகளை மாற்றிக் கொள்வது அரிதான செயலாகும்.
====================================

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.  - 8

தி.பொ.ச. உரை: அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்கு பிறவி என்னும் ஆழக்குழியினைக் கடப்பது அரிதான செயலாகும். ( ஆய்வுக் கட்டுரை)
===================================

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.  - 9

தி.பொ.ச. உரை: எண்வகைக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத ஒரு தலைவனிடத்தில் வீரமும் பொருட்செல்வமும் இருந்தும் பயனில்லாமல் போகும். ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.  -10

தி.பொ.ச. உரை: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவரேயல்லால் பிறர் பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பது இயலாது.
=====================================